அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
தொண்ணூற்றைந்தாம் பாடல்
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!
பொருள்
என்றும் அழியாத நற்குணங்களின் நிறைவாக விளங்கும் அன்னையே! அருளின் பெருங்கடலே! இமயமலையின் அரசனான இமவானின் மகளாக அவதரித்த கோமளமான அபிராமித் தாயே! எனக்கு நன்மை நடந்தாலும் சரி, தீமை ஏற்பட்டாலும் சரி, அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என் வாழ்க்கையில் எது நடந்தாலும், அது அனைத்தும் உனக்கே உரியது. ஏனெனில், எனது உடல், பொருள், உயிர் எனக்குச் சொந்தமான அனைத்தையும், நீ என்னை உன் அடியவனாக ஏற்றுக்கொண்ட அன்றே உன் திருவடிகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டேன்.
