அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
தொண்ணூற்று ஒன்பதாம் பாடல்
குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.
பொருள்
கயிலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் துணைவியும், இமவானின் மகளுமாகிய அபிராமி தேவி, கனமான பொற்குழைகளை அணிந்த அழகியவள். மதுரையில் உள்ள கடம்பவனத்தில் குயிலாக விளங்குபவள். கயிலாயமாகிய இமயமலையில் அழகும் பெருமையும் கொண்ட மயிலாகத் திகழ்பவள். சிதம்பரமாகிய விண்ணுலகில் உதிக்கும் சூரியனைப் போல ஒளிவீசுபவள். திருவாரூரைக் குறிக்கும் மூலாதாரத் தாமரையில் அழகிய அன்னமாக வீற்றிருப்பவளும் அவளே.
