அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்தொன்பதாம் பாடல்
தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.
பொருள்
கரும்பை நீண்ட வில்லாகவும், ஐந்து மலர்களை ஐந்து அம்புகளாகவும் ஏந்தி நிற்கும் அபிராமி அன்னையே! உன்னைத் தவிர எனக்கு வேறு எந்தப் பற்றும் துணையும் இல்லை என்பதை அறிந்திருந்தும், உன்னைத் தியானிக்கும் தவநெறியில் என் மனதைச் செலுத்த நான் முயற்சி செய்யவில்லை. பஞ்சையும் மிதிக்க அஞ்சும் அளவுக்கு மென்மையான திருவடிகளை உடைய தாய்மார்கள், தங்கள் பிள்ளைகள் எவ்வளவு தவறு செய்தாலும் அவர்களைத் தண்டிக்க மாட்டார்கள். அதுபோல, என் குறைகளையும் தவறுகளையும் பொருட்படுத்தாமல் நீ என்னை அருளுடன் காத்தருள வேண்டும்.
