அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்தைந்தாம் பாடல்
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.
பொருள்
ஆயிரக்கணக்கான மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒரு திருமேனியாகத் தோன்றுவது போல ஒளிவீசுபவளும், தன் அடியவர்களின் மனதில் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளும், அரிய வேதங்களுக்கு ஆதியாகவும், நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதன்மைத் தெய்வமாகிய அபிராமித் தாயை உலக மக்கள் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும், அவர்களிடம் இருந்து அன்னைக்கு எதையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
