அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஏழாம் பாடல்
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
பொருள்
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவனும், பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய உன் பாதியாக விளங்கும் சிவபெருமானும், பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும் வணங்கி எந்நாளும் போற்றித் துதிக்கும் திருப்பாதங்களை உடையவளே! செந்தூரத் திலகம் அணிந்த திருமுகத்தால் பேரழகுடன் திகழும் அபிராமி அன்னையே! தயிரைக் கடையும் மத்தைப் போல, பிறவிப் பெருங்கடலின் சுழலில் சிக்கி நான் அலைந்து திரியாமல், அழிவற்ற பேரின்ப நிலையை அடையும்படி உன் திருவருளால் என்னை வழிநடத்துவாயாக!
