அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபத்தொன்பதாம் பாடல்
விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.
பொருள்
அபிராமி அன்னையின் திருக்கண்களில் எங்களை அருளால் காக்கும் கருணை நிறைந்த பார்வை உள்ளது. அந்தப் பேரருளைப் பெறுவதற்காக, வேதங்கள் காட்டிய நல்வழியில் அவளை வழிபட்டு, தியானம் செய்யும் நல்ல பக்குவமான மனமும் எமக்கு உள்ளது. இவ்வாறு இருக்கும்போது, தீய செயல்களிலும் கொடிய பாவங்களிலும் ஈடுபட்டு, இறுதியில் நரகத்தில் வீழும் தீயவர்களுடன் இனிமேல் எனக்கு என்ன தொடர்பு இருக்கிறது?
