அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபத்தெட்டாம் பாடல்
செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே.
பொருள்
அழகிய பொற்கலசத்தைப் போன்ற திருத்தனங்களின் மேல் சந்தனக் குழம்பைப் பூசியிருக்கும் அபிராமி அன்னையின் அழகை நான் என் மனத்தில் பதித்துக் கொண்டேன். அவளது காதுகளில் அணிந்திருக்கும் முத்துக் கொப்புகள், வயிரக் குழைகள், கருணை நிறைந்த கண்களின் கடைக்கண் பார்வை, பவளம் போன்ற சிவந்த வாய், அந்த வாயில் மலர்ந்து விளங்கும் கருணை நிறைந்த புன்னகை ஆகிய அனைத்தையும் என் இரு கண்களாலும் பார்த்து, ஓவியம் போல என் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொண்டேன்.
