அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்தேழாம் பாடல்
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே
பொருள்
தேவியே! சிவபெருமான் அளந்து கொடுத்த இரண்டு நாழி நெல்லைக் கொண்டு, உலகில் உள்ள அனைவரின் பசியையும் போக்குவதற்காக முப்பத்திரண்டு வகையான அறங்களையும் குறைவில்லாமல் செய்து முடித்தவளே! உன்னை அழகிய தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றும் வாய்ப்பை எனக்கு அருளியவளும் நீயே.
ஆனால், இன்று செல்வந்தர் என்பதற்காக ஒருவரின் முன் சென்று நின்று, உண்மையையும் பொய்யையும் கலந்து அவரைப் புகழ்ந்து பாடி வாழ வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டாயே! இதுதான் உன் திருவருளா, தாயே?
