அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பத்தேழாம் பாடல்
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
பொருள்
அழிவில்லாத பேரின்பத்தில் வாழ வழிகாட்டும் உயர்ந்த பரம்பொருளை மெய்ஞ்ஞானத்தின் மூலம் நான் அறிந்துகொண்டேன். அந்தப் பரம்பொருளை மனதில் நினைத்து தியானிப்பதுபோன்ற ஒரு பொருளாகக் கூற முடியாது; அது இப்படிப்பட்டது என்று வாயால் விளக்கவும் முடியாது. ஏழு கடல்களுக்கும், ஏழு உலகங்களுக்கும், அவற்றைவிட உயரமாக உள்ள எட்டு மலைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில், இரவையும் பகலையும் உருவாக்கும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் அந்தப் பரம்பொருள் ஒளிர்ந்து விளங்குகிறது.
