அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பத்தாறாம் பாடல்
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்து வேனே
பொருள்
ஆலகால விஷம் என்னும் கொடிய நஞ்சை உண்டு, அதைத் தன் கழுத்திலேயே தாங்கியதால் கறுத்த கழுத்தைக் கொண்ட சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் பொன்னிற மேனியுடைய அபிராமி அம்மையே!
அடியவர்கள் அறியாமையால் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், அறிவும் பெருந்தன்மையும் கொண்ட பெரியவர்கள் அவர்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது தொன்றுதொட்டு வந்த நல்ல பண்பாகும். அதுபோல, நீ விரும்பாத செயல்களை நான் அறியாமையால் செய்தாலும், என் தவறுகளை நீ பொறுத்தருளுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால், அன்னையே, உன்னைப் போற்றி வணங்குவதில் நான் ஒருபோதும் தவறமாட்டேன்.
