அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பத்து ஐந்தாம் பாடல்
திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
பொருள்
அலைகள் பொங்கி எழும் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பணையின் மீது திருமால் பள்ளிகொண்டு துயில்கிறார். அவருடன் ஒன்றாக விளங்கும் உயர்ந்த பரம்பொருளே! ஈசனின் திருமுடியில் அணிந்திருக்கும் பிறைச்சந்திரனைப் போன்ற மணம் வீசும் உன் திருவடியை, எந்த நன்மையும் செய்யத் தகுதியற்ற எங்களைப் போன்ற எளியவர்களின் தலையில் வைத்து அருளுகிறாய். இத்தகைய அரிய பேறு எங்களுக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமான எங்கள் தவத்தின் சிறப்பை என்னவென்று சொல்வது!
எண்ணற்ற தேவர்களுக்குக்கூட கிடைக்காத இந்தப் பெரும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருப்பது வியப்புக்குரியது. இப்படிப்பட்ட உயர்ந்த அருளைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக்கூட எளிதில் கிடைக்காது.
