அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பத்து மூன்றாம் பாடல்
இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
பொருள்
ஈசனின் மனத்தையே உருகச் செய்து மகிழ்விக்கும் அழகிய தாயே! மணம் நிறைந்த சந்தனக் குழம்பைப் பூசிய அழகிய மார்பகங்களைக் கொண்ட மென்மையானவளே!
நான் செய்த பாவங்களின் காரணமாக, என்னை அழைத்துச் செல்ல யமன் வரும்போது நான் அச்சத்தால் நடுங்குவேன். அந்த வேளையில் மிகுந்த துயரத்துடன் உன்னிடம் ஓடிவந்து, “அன்னையே! என்னைக் காத்தருள வேண்டும்” என்று உன்னைச் சரணடைவேன்.
அப்போது நீ “அஞ்சாதே!” என்று கூறி, எனக்கு அபயம் அளித்து, யமனிடமிருந்து என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.
