அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பத்திரண்டாம் பாடல்
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!
பொருள்
சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் அன்னையே! அழகிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய அணிகலன்களை அணிந்த தேவியே! ஆசைகள் என்னும் அலைகள் நிறைந்த கடலில் சிக்கி, அதனால் எமனின் கையில் உள்ள காலபாசத்தில் மாட்டித் துன்பப்பட வேண்டிய என்னை, உன் தாமரை போன்ற திருவடிகளை என் தலையில் வைத்து, அன்புடன் என்னை ஏற்றுக்கொண்டு ஆட்கொண்டாய். இவ்வாறு என்மீது நீ காட்டிய அளவற்ற அருளையும் பெருங்கருணையையும் நான் எவ்வாறு போற்றிப் புகழ்வேன்?
