அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்தேழாம் பாடல்
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
பொருள்
பேரழகு நிறைந்த அன்னையே! என் முன்வினைப் பயனால் ஏற்பட்ட இந்தப் பிறவித் துன்பத்தை நீக்கி, என் உள்ளம் உருகும் அளவிற்கு உன்மீது ஆழ்ந்த பக்தியையும் அன்பையும் ஏற்படுத்தினாய். தாமரை மலரைப் போன்ற உன் திருவடிகள் இரண்டையும் என் தலையால் வணங்கி மகிழும் புனிதமான தொண்டையும் எனக்கு அருளினாய். என் மனத்தில் படிந்திருந்த ஆணவம் போன்ற அனைத்து அழுக்குகளையும், உன் கருணை என்னும் தூய நீரால் கழுவி அகற்றினாய். இவ்வளவு உயர்ந்த உன் திருவருளையும் கருணையையும் நான் எவ்வாறு எடுத்துச் சொல்லிப் புகழ்வேன்?
