அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்தாறாம் பாடல்
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே
பொருள்
மணம் வீசும் கடம்ப மலர்களைச் சூடிய கூந்தலை உடைய அபிராமி தேவியே! பதினான்கு உலகங்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் மும்மூர்த்திகள்கூட உன்னைப் போற்றித் துதிக்கும் அடியவர்களாக உள்ளனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன் மணமிக்க திருவடிகளுக்குச் சிறிதும் தகுதியற்ற எளியவனான என் வாயிலிருந்து வெளிவரும் பொருளற்ற சொற்களைக்கூட நீ புகழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு மகிழ்கிறாய். இவ்வாறு, மதிப்பற்ற என் சொற்களுக்குக்கூட நீ பெருமை அளிப்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவை பெற்ற உயர்வு உண்மையிலேயே நகைப்புக்குரியதாக அல்லவா தோன்றுகிறது?
