அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபத்தேழாம் பாடல்
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.
பொருள்
பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, தீயவர்களின் உயிர்களைப் பலியாக ஏற்றுக்கொள்ளும் சண்டிகா, காளி, ஒளிரும் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட வட்ட வடிவ மேகலையை அணிந்தவள், மாலினி, சூலி, வராகி என்று பல திருநாமங்களைக் கொண்டவள் அபிராமி தேவி. இவ்வாறு நான்கு வேதங்களிலும் சிறப்பாகப் போற்றப்படும் தேவியின் திருநாமங்களை அறிந்தவர்கள், அவற்றை முறையாக வரிசைப்படுத்திக் கூறுகின்றனர்.
