அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபதாம் பாடல்
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
பொருள்
அபிராமி அம்பிகை எழுந்தருளியிருக்கும் சிந்தாமணி மாளிகை அமைந்த கடம்பவனத்தில், இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் திருக்கரத்தில் ஏந்தியவளாகவும், அழகிய தனங்களுடனும், உலகில் உள்ள அனைவரும் கண்டு மகிழும் பசுமை நிறம் கொண்ட திருமேனியுடனும் அபிராமி அன்னை காட்சி அளிக்கிறாள். மதங்க முனிவரின் குலத்தில் தோன்றிய அந்தத் தாயின் அளவற்ற பேரழகை என் கண்களால் கண்டு மனம் மகிழும் பெரும் பேற்றைப் பெற்றேன்.
