அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்திரண்டாம் பாடல்
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.
பொருள்
கொடிபோல் அழகும் மென்மையும் கொண்ட அபிராமி அன்னையே! இளமையான வஞ்சிக் கொடியைப் போன்றவளே! எனக்கு உரிய காலம் வருவதற்கு முன்பே கனிந்த பழத்தைப் போன்ற அரியவளே! வேத மலரிலிருந்து வீசும் நறுமணத்தைப் போன்றவளே! குளிர்ந்த இமயமலையில் மகிழ்ச்சியுடன் விளையாடும் பெண் யானையைப் போன்றவளே! பிரம்மன் முதலான தேவர்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவளே! இப்பிறவி முடிந்த பின்னர் நான் மீண்டும் பிறவாதபடி, நீயே விரைந்து வந்து எனக்கு அருள் செய்து, என்னை உன் திருவடிகளில் ஆட்கொள்வாயாக!
