அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
பதினெட்டாம் பாடல்
வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.
பொருள்
அன்னையே! உன்னால் கவரப்பட்ட இடப்பாகத்தைக் கொண்ட சிவபெருமானும், நீயும் ஒன்றிணைந்து அருள்புரியும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலமும், உங்கள் இருவரின் திருமணத் திருக்கோலமும் என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஆணவத்தை முற்றிலும் அகற்றி, என்னை ஆட்கொண்ட உமது ஒளிபெற்ற திருவடிகளாகக் காட்சி தருகின்றன. கொடிய தன்மை கொண்ட காலன் என் உயிரைக் கவர வரும்போது, அவ்வேளையில் என் முன் வெளிப்படையாகத் தோன்றி, உமது திருக்காட்சியை எனக்கு அருளி நிற்பீராக!
