அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பத்தெட்டாம் பாடல்
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்
தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!
பொருள்
அசுரர்களின் முப்புரங்களையும் அழிக்க மேரு மலையை வில்லாக வளைத்தவரும், பிரம்மனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அபிராமி அம்மையே! எனக்கு வேறு எந்தத் துணையும் இல்லை. அதனால், “நீயே என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று உன்னை முழுமையாகச் சரணடைந்தேன். உன் அடியார்களின் கூட்டத்தில் சேரத் தகுதியற்றவன் என்று எண்ணி என்னை நீ புறக்கணிப்பது உனக்குச் சிறிதும் பொருத்தமானதல்ல. எனவே, தாயே, என்னையும் உன் அடியார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு அருள்புரிவாயாக.
