அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபத்தொன்றாம் பாடல்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!
பொருள்
இழந்தவற்றை நினைத்து வருந்தும் என் மனமே! கவலைப்படாதே. உலகில் யாராலும் ஒப்பிட முடியாத அழகிய திருமேனியைக் கொண்டவளும், வேதங்களின் தொடக்கம், நடுப்பகுதி, முடிவு என எல்லா இடங்களிலும் திருநடனம் புரிந்ததால் சிவந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவளும், தன் திருமுடியில் குளிர்ச்சியான இளம்பிறையைச் சூடியவளுமான யாமளை என்ற அழகிய கற்பகக் கொடியைப் போன்ற அபிராமி அன்னை நமக்கு இருக்கும்போது, உனக்கு என்ன குறை? அவள் அருள் இருந்தால் இழந்தவை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
