அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பத்தேழாம் பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
பொருள்
எட்டுத் திசைகளையும் ஆடையாகக் கொண்ட சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் அபிராமி அன்னையே! உன் திருக்கரங்களில் கரும்பினால் செய்யப்பட்ட வில்லையும், மலர்களால் ஆன அம்புகளையும் ஏந்தியிருக்கிறாய். செந்தாமரை மலரைப் போன்ற சிவந்த உன் திருமேனியில் அழகிய வெண்முத்து மாலையை அணிந்திருக்கிறாய். கொடிய நஞ்சைக் கொண்ட பாம்பின் படம் போன்ற அழகிய நுண்ணிய இடையில், பலவகை நவமணிகளால் செய்யப்பட்ட அழகிய மேகலையையும் அணிந்து சிறப்புடன் விளங்குகிறாய்.
