அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்தைந்தாம் பாடல்
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி <உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
பொருள்
மும்மூர்த்திகளுக்கெல்லாம் முதன்மையான அன்னையான அபிராமித் தாயே! உலகில் பிறந்துள்ள அனைத்து உயிர்களையும் பிறவித் துன்பத்திலிருந்து விடுவிக்க எழுந்தருளிய, எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் அரிய மருந்தே! உன்னைப் போற்றும் அடியவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களை வணங்கி, பிறவிப் பிணியிலிருந்து விடுபடும் நோக்கத்துடன் முற்பிறவியில் தவங்களைச் செய்து வைத்தேன். இனி எக்காலத்திலும் உன்னை மறக்காமல், நிலையான பக்தியுடன் உன்னைத் துதித்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு உன்னை அடைந்த எனக்கு இனி குறை என்று எதுவும் இல்லை; என் வாழ்வில் வேண்டியது அனைத்தும் நிறைவேறிவிட்டது.
