அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
பதினைந்தாம் பாடல்
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
பொருள்
அழகிய பண்ணிசை போன்ற இனிமையான மொழிகளைப் பேசும், நறுமணம் கமழும் திருமேனியுடைய பசுங்கிளி போன்ற தேவியே! உன் பேரருளைப் பெறுவதற்காக முற்பிறவிகளில் கோடிக்கணக்கான தவங்களைச் செய்தவர்கள், இந்த உலகை ஆளும் அரச செல்வத்தை மட்டுமா பெறுவார்கள்? அனைவராலும் போற்றப்படும் தேவர்களின் வானுலகத்தையும், அரிய செல்வங்களையும், இறுதியில் அழிவில்லாத முக்தி எனும் பேரின்ப நிலையையும் பெற்று மகிழ்வார்கள் அல்லவா!
