திருவள்ளூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். புனித நீராடிய பக்தர்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை தினத்தில் புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. இதன்படி, இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

தெப்பக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதனிடையே, வீரராகவ பெருமாள் கோயிலிலும் அதிகாலை 5 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவே திருவள்ளூருக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
