ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில், இந்திரகீலாத்திரி மலையின் உச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனகதுர்கையம்மன் கோயிலில், மகிஷாசுரமர்த்தினி வடிவில் தேவி அருள்பாலிக்கிறார். திரேதாயுக காலத்திலேயே அன்னை இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

பண்டைய காலத்தில், இப்பகுதி பாறைகள் நிறைந்த தரிசு நிலமாக இருந்ததால், கிருஷ்ணா நதி இயல்பாகப் பாய்வதில் பல தடைகள் இருந்தன. அப்போது சிவபெருமான் தனது அருளால் நதியின் ஓட்டத்திற்கு வழி ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. அதன் பின்னர் இப்பகுதி செழிப்பும் வளமுமிக்க தலமாக விளங்கத் தொடங்கியது.
மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன், இந்த புனித மலையில் கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதாகவும், போரில் வெற்றி அருள வேண்டி இறைவனை வேண்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த “வெற்றி” (விஜயம்) பெற்ற தலமாக விளங்கியதால், இவ்வூருக்கு “விஜயவாடா” என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும், இந்திரகீலா முனிவர் மலை வடிவில் இத்தலத்தில் தவம் மேற்கொண்டிருந்தார். அப்போது மகிஷாசுரன் என்ற அரக்கன் அவருக்கு பல்வேறு துன்பங்களை அளித்தாலும், முனிவர் தனது தவத்தை விடாமல் தொடர்ந்தார். அவரது பக்தியால் மகிழ்ந்த அம்பிகை, முனிவருக்கு நேரில் காட்சி அளித்தாள்.
அப்போது, “இந்த மலையையே தமது திருப்பதியாக ஏற்று, இப்பகுதி மக்களைக் காத்தருள வேண்டும்” என்று முனிவர் வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற அன்னை, மகிஷாசுரனை வதம் செய்து, இத்தலத்தின் காவல் தெய்வமாக அருள்பாலிக்கத் தொடங்கினாள்.
இன்று, சுமார் 4 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில், எட்டு கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி, மகிஷாசுரனை காலடியில் மிதித்தபடி, தங்க ஆபரணங்களும் மலர் மாலைகளும் அணிந்து, பக்தர்களுக்கும் இப்பகுதி மக்களுக்கும் அருளும் பாதுகாப்பும் வழங்கும் சக்தி தேவியாக கனகதுர்கையம்மன் காட்சியளிக்கிறார்.
