அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
தொண்ணூற்றிரண்டாம் பாடல்
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.
பொருள்
மும்மூர்த்திகளும், சிறந்த தேவர்களும் வணங்கி வழிபடும் அபிராம வல்லியே! மென்மையான புன்னகை மலரும் அழகிய திருவாயை உடையவளே! எனக்கு நல்ல ஆன்மிகப் பக்குவத்தை அருளினாய். அதனால் என் மனம் உருகி, உன் திருவடிகளை வணங்கும் நிலை ஏற்பட்டது. உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் நல்ல வழியில் நான் நடக்கும்படி, எளியவனான என்னையும் உன் அடியவனாக ஏற்றுக் கொண்டாய்.
ஆகையால், இனிமேல் பிறர் கூறும் வேறு சமயக் கருத்துகளைக் கேட்டு மனம் குழம்ப மாட்டேன். அவர்கள் காட்டும் பிற வழிகளிலும் செல்லாமல், உன் திருவடிகளையே நம்பி நல்ல நெறியில் வாழ்வேன்.
