அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பத்தொன்றாம் பாடல்
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.
பொருள்:
மனமே! புதிதாக மலர்ந்த குவளை மலர்களைப் போன்ற அழகிய கண்களைக் கொண்ட அபிராமி அன்னையும், சிவபெருமானும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்ற கருணையால் நம்மைத் தேடி வந்து அருள்புரிகின்றனர். தங்கள் அடியார்களுடன் நாமும் சேர்ந்து வாழும் பாக்கியத்தை அளித்து, தங்களுடைய திருவடி மலர்களை நம் தலையில் வைத்து ஆசீர்வதிக்கின்றனர். இத்தகைய உயர்ந்த அருளைப் பெறுவதற்கு நாம் முற்பிறவியில் என்னென்ன புண்ணியங்களைச் செய்திருக்கிறோமோ என்று நினைத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது.
