அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபதாம் பாடல்
உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
பொருள்
பேரருளின் முழுமையான வடிவமாக விளங்கும் நித்திய மங்கலே! நீ வாசம் செய்யும் இடம் எது? உன் கணவனாகிய பரமேசுவரனின் திருமேனியின் ஒரு பாகமா? எப்போதும் உன் புகழைப் பாடும் நான்கு வேதங்களா? அவற்றின் உச்சியாகத் திகழும் உபநிடதங்களா? அமுதம் பொழியும் வெண்ணிலவா? வெண்மையான தாமரை மலரா? அடியேனின் உள்ளமா? அல்லது பொங்கி எழும் அலைகளைக் கொண்ட பெருங்கடலா? இவற்றுள் எதனை உன் இருப்பிடமாகக் கொள்வாய்?
