மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வன பத்ரகாளியம்மன் கோயிலில், வன பத்ரகாளியம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் மூலவரும், நின்ற திருக்கோலத்தில் பத்ரகாளியம்மனும் பக்தர்களுக்கு அருளாட்சி வழங்குகின்றனர். இக்கோயிலின் தலவிருட்சமாக தொரத்தி மரம் விளங்குகிறது.

புராணக் கதையின்படி, சாகா வரம் பெற்ற மகிஷாசுரனை வதம் செய்யும் முன், அம்பாள் சிவபெருமானை தியானித்து இத்தலத்தில் பூஜை செய்து சக்தியைப் பெற்றதாக நம்பப்படுகிறது. கோயிலின் முன்புறத்தில் பகாசூரன் மற்றும் பீமன் ஆகியோர் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். மேலும், கிழக்கு நோக்கிய சந்நிதியில் முனியப்பன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் மேற்குப் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் பக்தர்கள் முதலில் புனித நீராடி, கரையோரத்தில் உள்ள முத்தமிழ் விநாயகரை வழிபட்ட பின்னரே அம்மன் சந்நிதிக்குச் செல்வதை மரபாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

செய்வினை தோஷம், பில்லி, சூனியம் போன்ற தீய விளைவுகள் நீங்கவும், குடும்ப நலன் மற்றும் மன அமைதி கிடைக்கவும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்தில் வழிபடுகின்றனர். குழந்தைப் பேறு வேண்டி பலரும் அம்மனை பிரார்த்திக்கின்றனர். புதிய தொழில் தொடங்குபவர்கள், திருமண பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பவர்கள் உள்ளிட்டோர், பத்ரகாளியம்மன் சந்நிதியில் பூ வைத்து உத்தரவு கேட்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இதன்படி, சிவப்பு மற்றும் வெள்ளை மலர்களை தனித்தனியாக பொட்டலமிட்டு அம்மன் திருவடியில் வைத்து வேண்டுதல் செய்கின்றனர். மனதில் நினைத்த மலரே கிடைத்தால், அம்மனின் அருள் உத்தரவு கிடைத்ததாக கருதி நல்ல காரியங்களை தொடங்குவது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும், இந்தத் தலத்தில் பத்ரகாளியம்மனுக்கு உகந்த நேர்த்திக்கடனாக கிடா பலி (கிடா வெட்டுதல்) செலுத்தும் வழக்கமும் இன்றளவும் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *