ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி, காலபைரவரை வழிபட மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இருப்பினும், சில மாதங்களில் வரும் தேய்பிறை அஷ்டமிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. அவற்றில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி மிகவும் சக்தி வாய்ந்த நாளாக போற்றப்படுகிறது. இந்த நாளில் மனமார்ந்த பக்தியுடன் காலபைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள், கடன் பிரச்சினைகள் மற்றும் தடைகள் நீங்கி, நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் காலபைரவரை எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் ஈசான்ய மூலையான வடகிழக்கு திசையில், நாய் வாகனத்துடன் நீலமேனியராக காலபைரவர் அருள்பாலித்து வருகிறார். கோவில் காலையில் திறக்கப்படும் நேரத்திலும், இரவு அர்த்தஜாம பூஜை நிறைவடையும் போதும் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆகம முறைகள் குறிப்பிடுகின்றன.
பவுர்ணமிக்கு அடுத்ததாக வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால், நீண்ட காலமாக தீராத பிரச்சினைகள் விலகி, இறையருள் பெருகும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு அரளிப்பூக்களால் காலபைரவரை அர்ச்சனை செய்தால், நல்ல சந்ததி, செல்வ வளம் மற்றும் குடும்ப முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பைரவர் வழிபாட்டிற்கு ஏற்ற நாட்கள்
அஷ்டமி திதி மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் ஆயில்யம், சுவாதி மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திர நாட்களிலும் காலபைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும். இந்நாட்களில் வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பு, பதவி உயர்வு மற்றும் தொழிலில் லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், சனி பிரதோஷ நாளில் காலபைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால், நீதிமன்ற வழக்குகள் மற்றும் நீண்டநாள் பிரச்சினைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல், தை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையிலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலபைரவரை வழிபட்டு, கால பைரவ அஷ்டகம் பாராயணம் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லைகள் விலகி, கடன்கள் தீர்ந்து, யம பயம் உள்ளிட்ட அனைத்து அச்சங்களும் நீங்கி, நீண்ட ஆயுளும் நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன.
