மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற துல்ஜாபூர் பவானி அம்மன் கோயில்! சிவாஜி மகராஜுக்கு பவானி வாளை வழங்கிய தெய்வம்
மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள துல்ஜாபூர் பவானி அம்மன் கோயில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான சக்தி தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. போஸ்லே அரச குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் துல்ஜா பவானியை, மாவீரன் சிவாஜி மகராஜ் ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. அப்போது அவருக்கு தேவி தன் அருளின் அடையாளமாக பவானி வாளை வழங்கியதாக நம்பப்படுகிறது.
புராணக் கதையின்படி, எருமை வடிவில் இருந்த மீஷன் என்ற அரக்கனை வதம் செய்த பிறகு, தேவி பாலகாட் பகுதியில் உள்ள யமுனாச்சல மலையில் குடிகொண்டதாகக் கூறப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் பவானி அம்மன் சுமார் மூன்று அடி உயரத்தில், எட்டு கரங்களுடன் வீரமிகு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்த கோயிலில் ராஜா ஹாஜி வாயில் மற்றும் ராஜமாதா ஜிஜாவு வாயில் என இரண்டு முக்கிய நுழைவாயில்கள் உள்ளன. பிரதான நுழைவாயில் வழியாக படிகளில் இறங்கிச் சென்றால் கருவறையை அடையலாம். கருவறைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ளித் தட்டில் (பலாங்), பவானி அம்மன் இரவு நேரங்களில் உறங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கோயில் வளாகத்தில் மார்க்கண்டேய ரிஷி கோயில், கோமுக தீர்த்தம், கல்லோல் தீர்த்தம், தூத் கோயில், சித்தி விநாயகர் கோயில், அமிர்த குளம், அன்னபூர்ணா தேவி கோயில் மற்றும் ரக்த பைரவர் கோயில் உள்ளிட்ட பல புனித சன்னதிகளும் தீர்த்தங்களும் அமைந்துள்ளன.
மற்றொரு புராண வரலாற்றின்படி, கர்த முனிவர் மறைந்த பிறகு, அவரது மனைவி அனுபூதி மந்தாகினி ஆற்றங்கரையில் அமர்ந்து பவானி தேவியை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். அப்போது குகூர் என்ற அசுரன் அவருக்கு துன்பம் அளித்ததால், தேவி அவனை வதம் செய்து அனுபூதியை காத்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகே அன்னை துல்ஜா பவானி என்ற திருநாமத்தால் புகழ்பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், மாதங்கா என்ற அசுரனையும் வதம் செய்து தேவர்களை காத்த தெய்வமாகவும் துல்ஜா பவானி அம்மன் போற்றப்படுகிறார்.
