சேலம் அருகே அருள்பாலிக்கும் மேச்சேரி பத்ரகாளியம்மன்… தரிசித்தாலே பாவங்கள் நீங்கி, தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
சேலத்தில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும், மேட்டூர் அணையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோயில், 800 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமை பெற்ற புண்ணியத் தலமாக விளங்குகிறது. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள அம்மனின் ஆலயத்தின் ராஜகோபுரம் பக்தர்களை கம்பீரமாக வரவேற்கிறது.
உயர்ந்த மதில்களால் சூழப்பட்டுள்ள இக்கோயிலில், நான்கு திசைகளிலும் கோபுர வாசல்கள் அமைந்துள்ளன. ருத்ர வடிவில் அருள்பாலிக்கும் பத்ரகாளியம்மன், சூலம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், அசுரத் தலை மற்றும் மணிகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தாங்கியபடி, தண்டையணி மற்றும் பொன் சலங்கையுடன் பக்தர்களுக்கு அருள்காட்சி தருகிறார்.
வலது காலை மடக்கி வீராசனத்தில் அமர்ந்துள்ள அன்னை, இடது காலை அசுரனின் மீது பதித்தபடி வீற்றிருக்கிறார். மூக்கில் மின்னும் மூக்குத்தி, அக்னி மகுடம், குண்டலங்கள் மற்றும் பவளம் போன்ற புன்னகையுடன் காட்சியளிக்கும் பத்ரகாளியம்மனின் திருமேனி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தத் தலத்தில் அம்மனை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளாகச் சேர்ந்த பாவங்கள் நீங்கும், சோகம் மற்றும் நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. மேலும், ராகு-கேது தோஷம், திருமணத் தடை மற்றும் குழந்தைப் பேறு தாமதம் போன்ற பிரச்சினைகள் நீங்க, ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயிலில் தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது பூங்கரகம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னிக் குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றி, அம்மனின் அருளைப் பெறுகின்றனர்.
