திருநட்டாலம் சங்கரநாராயணர்: திருமணத் தடைகள் நீங்கி, வழக்குகளில் வெற்றி தரும் திருத்தலம்!

சிவனும் திருமாலும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்தும் திருத்தலங்கள் அனைத்துமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. சங்கரநாராயணராக ஈசன் அருள்பாலிக்கும் இத்தலங்கள், தம்பதி ஒற்றுமையை வளர்ப்பதோடு, இல்லற வாழ்வுக்குத் தேவையான நலன்களையும், வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் ஞானத்தையும் வழங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில்.

நாகர்கோவிலில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் திருநட்டாலம் அமைந்துள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் புகழ்பெற்ற சிவாலய ஓட்டத்தில் இடம்பெறும் 12 சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

பீமனின் கர்வத்தைப் போக்கிய திருத்தலம்

திருநட்டாலம் தலத்துடன் மகாபாரத நிகழ்வும் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் நடத்த வேண்டிய யாகத்துக்காக புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது. ஆனால், அது வசிக்கும் எல்லைக்குள் சென்று அதனை அழைத்து வருவது மிகவும் கடினமான காரியம்.

தன்னுடைய உடல் பலத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த பீமன், புருஷாமிருகத்தைத் தானே அழைத்து வருவதாகக் கூறினான். அப்போது, சிவனும் ஹரியும் ஒன்றே என்பதை உணர்த்தவும், பீமனின் பலத்தின் மீதான அகந்தையை அகற்றவும் கிருஷ்ணர் ஓர் உபாயத்தைச் சொன்னார்.

கிருஷ்ணர் பீமனிடம் 12 ருத்திராட்சங்களைக் கொடுத்து, “புருஷாமிருகம் உன்னைத் துரத்தும்போது, நீ ஓடிச் செல்லும் வழியில் சோர்வு ஏற்பட்டால் ஒவ்வொரு ருத்திராட்சமாகக் கீழே வைத்துவிடு. அவை சிவலிங்கங்களாக மாறும். சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் அதை வழிபடாமல் கடந்து செல்லாது. அந்த நேரத்தில் நீ வெகுதூரம் ஓடிச் செல்லலாம்” என்று கூறியதாக ஐதீகம்.

கிருஷ்ணர் கூறியபடியே பீமனும் செய்தான். ருத்திராட்சங்கள் சிவலிங்கங்களாக மாறின. அவற்றைக் கண்ட புருஷாமிருகம் ஒவ்வொரு முறையும் நின்று சிவனை வழிபட்டது. இருப்பினும், 12 ருத்திராட்சங்களையும் பயன்படுத்திய பின்னரும் பீமனால் முழுமையாக அதன் எல்லையைக் கடக்க முடியவில்லை.

எல்லையைத் தாண்டும் தருணத்தில் பீமனின் ஒரு காலை புருஷாமிருகம் பிடித்துக் கொண்டது. ஒரு கால் அதன் எல்லைக்குள்ளும் மற்றொரு கால் வெளியிலும் இருந்ததால், பீமன் தனக்கே சொந்தம் என்று புருஷாமிருகம் வாதிட்டது. பீமனும் அதை ஏற்கவில்லை.

இதையடுத்து இந்த விவகாரம் தர்மபுத்திரரான தருமரிடம் சென்றது. உடன்பிறந்தவன் என்ற பாசத்தைக் காட்டாமல், நீதியின் அடிப்படையில் தீர்ப்பளித்த தருமர், பீமனின் உடலில் ஒரு பகுதியை புருஷாமிருகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது.

தருமரின் நேர்மையான தீர்ப்பைக் கண்டு புருஷாமிருகம் வியந்தது. அவரது நியாய உணர்வைப் பாராட்டி பீமனை விடுவித்ததோடு, தனது பாலை வழங்கவும் சம்மதித்தது.

அப்போது, பீமன் வைத்த 12-வது ருத்திராட்சம் இருந்த இடத்தில் ஈசன் சங்கரநாராயணராக காட்சி அளித்ததாகத் தல வரலாறு கூறுகிறது. புருஷாமிருகமாக இருந்த வியாக்ரபாத முனிவரும் சிவனும் திருமாலும் ஒன்றே என்பதை உணர்ந்தார். பீமனும் தனது பலத்தின் மீதான அகந்தையை விட்டொழித்தான்.

இதனால், பக்தர்களுக்கு ஒற்றுமையையும், மெய்ஞ்ஞானத்தையும் உணர்த்தும் திருத்தலமாக திருநட்டாலம் விளங்குகிறது.

இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ள சிறப்பு

திருநட்டாலத்தில் பெரிய திருக்குளத்தின் மேற்குப் பகுதியில் மகாதேவர் ஆலயமும், கிழக்குப் பகுதியில் சங்கரநாராயணர் ஆலயமும் அமைந்துள்ளன.

மகாதேவர் ஆலயம் பீமனால் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சற்று உயரமான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் கொடிமரம் கிடையாது. நுழைவாயிலில் பலிபீடமும், கருவறைக்கு முன்பாக ஓடால் வேயப்பட்ட நந்தி மண்டபமும் காணப்படுகின்றன.

வட்ட வடிவில் அமைந்துள்ள கருவறையின் மேற்பகுதி தேக்குமரங்களால் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டு, அதன் மீது செப்புத் தகடும் வேயப்பட்டுள்ளது. கருவறையில் உயரமான பீடத்தின் மீது சுயம்பு லிங்க வடிவில் மகாதேவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

இங்கு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி கருவறையை வலம் வந்தால் மனக்குழப்பங்கள் நீங்கி, மனதில் நேர்மறையான எண்ணங்கள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தெற்கு நோக்கிய விநாயகர், நாகர் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, சண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதாகும். வெளிப்புறத்தில் பழைமையான ‘குச்சரி மூடு’ எனப்படும் மரத்தடியில் துர்கை அம்மன், சப்தமாதர்கள், காலபைரவர், சாஸ்தா ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

சங்கரநாராயணரின் அற்புத தரிசனம்

சங்கரநாராயணர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் 16 தூண்களைக் கொண்ட நமஸ்கார மண்டபத்தை அடையலாம். அதற்கு அடுத்த பகுதியில் வட்ட வடிவிலான கருவறை அமைந்துள்ளது. விமானப் பகுதியில் அழகிய சிற்பங்களும் காணப்படுகின்றன.

கருவறையின் அருகில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு விநாயகர் சிவலிங்கத்தின் கோமுகிப் பகுதியில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

கருவறையில் சுயம்பு லிங்க வடிவில் சங்கரநாராயணர் அருள்பாலிக்கிறார். இங்கு சிவனின் பாகத்தில் காளை வாகனமும், திருமாலின் பாகத்தில் கருட வாகனமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.

மேலும், தல வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் சங்கரநாராயணரின் ஒருபுறம் பீமனும், மறுபுறம் வியாக்ரபாத முனிவரும் அமர்ந்திருக்கும் காட்சியையும் தரிசிக்கலாம்.

சிவாலய ஓட்டத்தின் நிறைவுத் தலம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் பல சிவத்தலங்களை ஓடி சென்று தரிசனம் செய்கிறார்கள். அந்த ஓட்டத்தில் 12-வது தலமாக திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயம் அமைந்துள்ளது.

சிவாலய ஓட்டத்தின் போது ஒவ்வொரு சிவாலயத்திலும் பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இறுதியாக திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் சந்தனப் பிரசாதம் பெற்றுக்கொண்டு பக்தர்கள் தங்களின் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கிறார்கள்.

சிறப்பு வழிபாடுகள்

இத்தலத்தில் பங்குனி மாதத்தில் 10 நாள்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. சர்க்கரைப் பாயசம், பால் பாயசம், அவல், பஞ்சாமிர்தம் மற்றும் பழங்கள் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.

சங்கரநாராயணரை மனமுருகி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், வழக்குகளில் வெற்றி பெற வேண்டியும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர்.

சிவனும் திருமாலும் ஒன்றே என்ற உண்மையை உணர்த்தும் இந்தத் திருத்தலம், பக்தர்களுக்கு ஆன்மிக நம்பிக்கையையும் மன அமைதியையும் வழங்கும் சிறப்புமிக்க தலமாகத் திகழ்கிறது.

வாய்ப்புள்ளவர்கள் ஒருமுறையேனும் திருநட்டாலம் சென்று சங்கரநாராயணரையும் மகாதேவரையும் தரிசித்து இறையருள் பெறலாம். இறைவனின் அருளால் வாழ்வில் தடைகள் நீங்கி, மன அமைதியும் நலமும் பெருகட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *