ஆவணி மாதம் புதிய தொடக்கங்களுக்கான சிறப்புமிக்க மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுப காரியங்கள், திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவதற்கு ஏற்ற காலமாக ஆவணி விளங்குகிறது. ஆன்மிக வழிபாடுகள், பாரம்பரிய நிகழ்வுகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என தெய்வீகத்துடனும் உற்சாகத்துடனும் நிறைந்த மாதமாக இது திகழ்கிறது.

தமிழ் மாதங்களில் ஐந்தாவதாக வரும் ஆவணி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமாகவும் இது அமைகிறது. மேலும், முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியும், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தியும் ஆவணி மாதத்திலேயே கொண்டாடப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, வேதங்கள் மற்றும் மந்திரங்களில் மிகவும் புனிதமானதாகப் போற்றப்படும் காயத்ரி மந்திரத்தை ஜபித்து ஆன்மிக ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆவணி அவிட்டம் மற்றும் காயத்ரி ஜபம் போன்ற முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளும் இந்த மாதத்தில் இடம்பெறுகின்றன.
இந்த ஆண்டு ஆவணி மாதம் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 17ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் இடம்பெறும் முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், பண்டிகைகள் மற்றும் சுப முகூர்த்த தினங்கள் எவை என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
